Friday, May 25, 2018

மூஸா (அலை) அவர்கள் வானவரின் கன்னத்தில் அறைந்தார்களா?




حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ فَلَمَّا جَاءَهُ صَكَّهُ، فَرَجَعَ إِلَى رَبِّهِ، فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لاَ يُرِيدُ الْمَوْتَ‏.‏ قَالَ ارْجِعْ إِلَيْهِ، فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ، فَلَهُ بِمَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعَرَةٍ سَنَةٌ‏.‏ قَالَ أَىْ رَبِّ، ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ‏.‏ قَالَ فَالآنَ‏.‏ قَالَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنَ الأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ كُنْتُ ثَمَّ لأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الأَحْمَرِ ‏"‏‏.‏ قَالَ وَأَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ هَمَّامٍ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ‏.
புகாரி 3407

3407. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 'மலக்குல் மவ்த்' (உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்துவிட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, 'மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்' என்று கூறினார். இறைவன், 'நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரின் கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரின் கரம் மூடுகிறதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.)' எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூஸா(அலை) அவர்களிடம் கூறியபோது) அவர், 'இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?' என்று கேட்டார்கள். இறைவன், 'மரணம் தான்' என்று பதிலளித்தான். மூஸா(அலை) அவர்கள், 'அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள்' என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத் தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். 


(இதை எடுத்துரைத்த போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணல் குன்றின் கீழே அவரின் மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டியிருப்பேன்' என்று கூறினார்கள். 


ஹம்மாம்(ரஹ்), 'அபூ ஹுரைரா(ரலி) இதே போன்று நபி(ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்து உள்ளார்கள்' என்று கூறுகிறார்கள். 


இந்த ஹதீஸை மறுப்பதற்கான வாதங்கள்


1. உயிரைக் கைப்பற்றும் வானவர் தன் கடமையைச் செய்ய வந்தால் மூஸா நபி அவரது கன்னத்தில் அறைய முடியுமா?

2. மூஸா (அலை) அவர்கள் மரணத்தை விரும்பாமல், இவ்வுலக வாழ்வின் மீது ஆசைப்பட்டு, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தாரா?

3. ஒரு பேச்சுக்கு மூஸா (அலை) அவர்கள் தான் கன்னத்தில் அறைந்திருந்தாலும், உயிரை எடுப்பதற்காக அனுப்பப்பட்ட வானவர் தன் கடமையைச் செய்யாமல் தோல்வியுடன் திரும்பிச் செல்வாரா? இது வானவர்களின் தன்மைக்கே முரண் அல்லவா?

4. வானவரின் அசாத்திய பலத்துக்கு முன்னால் மூஸா (அலை) அவர்களின் பலம் ஒன்றுமில்லை. இவ்வாறிருக்கும் போது வானவரை மூஸா எப்படி அறைந்திருக்க முடியும்?



இனி இந்த வாதங்களுக்கான பதிலை விரிவாகப் பார்க்கலாம்.


பதில்  1:

 மூஸா (அலை) அவர்கள் வானவரை அறைந்தது, அவர் உயிரை எடுக்கும் வானவர் என்பதற்காகவல்ல. தன்னை முறையாக அறிமுகப் படுத்திக் கொள்ளாத ஒரு மனிதர் தம் வீட்டுக்குத் திடீரென்று வந்து, “உன் கதையை முடிக்கப் போகிறேன்” என்று அச்சுறுத்தும் போது, ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்வானோ, அதே அடிப்படையில் தான் மூஸா (அலை) அவர்களும் நடந்து கொண்டார்கள். “உன் ஆயுள் முடிந்து விட்டது” என்று வானவர் கூறியவுடன் சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறி, வந்தவர் முகத்தில் கண் பிதுங்கிப் போகும் அளவுக்கு அடித்து விட்டார்.

உயிரை எடுக்கும் வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி சில சந்தர்ப்பங்களில் மனித வடிவிலும் வந்திருப்பதாக முஸ்னத் அஹ்மதில் இருக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸுக்கு அமைய, இங்கும் உயிரை எடுக்கும் வானவர் மனித வடிவில் தான் வந்திருக்கிறார். வந்தவர், தன்னை யாரென்று மூஸா (அலை) அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் மூஸா (அலை) அவர்களால் வானவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இதன் விளைவாக மூஸா (அலை) அவர்கள் வந்த வானவரை ஒரு கொலைகாரனென்று நினைத்துத் தாக்கினார்கள்.

மேலும், வந்த வானவர் மனித வடிவில் வந்ததால் தான் மூஸா (அலை) அவர்களால் வானவரை அடிக்க முடிந்தது. வானவர் மனித வடிவில் இருந்ததால் தான், மூஸா (அலை) அடித்த ஒரே அடியில், அவரது கண் பிதுங்கிப் போனது.

இந்த ஹதீஸுக்கு ஷெய்க் அல்பானி அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கமும் இது தான்.

(மவ்ஸுஅத்துல் அல்லாமாஹ் – பாகம் 8, பக்கம் 172-179)


பதில்  2:


உயிரை எடுக்கும் வானவர், மூஸா (அலை) அவர்களை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வானவர் நினைத்திருந்தால், மூஸா (அலை) அவர்களது உயிரை உரிய நேரத்தில் கைப்பற்றியிருக்கலாம். அப்படியிருந்தும், உயிரை எடுக்காமல் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் முறையிட்டார்.

இதன் அர்த்தம் வானவர் இயலாமையால் திரும்பிச் சென்றார் என்பதல்ல. உயிரைப் பறிக்கும் விடயத்தில் நபி மார்களுக்கு மட்டும் ஒரு விதிவிலக்கான சலுகையை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். அந்த விதிவிலக்கைக் கருத்திற் கொண்டு தான் வானவர் திரும்பிச் சென்றார்.

அது என்ன விதிவிலக்கு?


நபிமார்களுக்கு மட்டும் அல்லாஹ் ஒரு கன்னியத்தைக் கொடுத்திருக்கிறான். நபி மார்கள் விசயத்தில், அவர்கள் விருப்பத்துக்கு மாற்றமாக, வலுக்கட்டாயமாக உயிரைப் பறிக்கும் அதிகாரம் உயிரை எடுக்கும் வானவர்களுக்கு இல்லை. நபியின் சம்மதத்தோடு மட்டுமே உயிரை எடுக்க முடியும். இதனால் தான் வானவர், மூஸா (அலை) அவர்களின் உயிரைப் பறிக்காமல் திரும்பிச் சென்று முறையிட்டார்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்த போது, சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரையில், அல்லது (உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில் எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்பட வில்லை என்று சொல்லிவந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்த போது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்) என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், இனி நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்க மாட்டார்கள் என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்த போது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற) செய்தி இது தான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) நான் அறிந்து கொண்டேன்.

(புகாரி 4437 / முஸ்லிம் 4833)


 பதில்  3:


 மூஸா (அலை) அவர்களைப் பற்றி வானவர் அல்லாஹ்விடம் மரணத்தை விரும்பாத ஒருவரிடம் தன்னை அனுப்பியதாக முறையிட்டார். இதன் அர்த்தம் மூஸா (அலை) அவர்கள் மரணத்தை விரும்பாதவர் என்பதல்ல. மரணத்தை விரும்பாதவரைப் போல் மூஸா (அலை) நடந்து கொண்டதாக வானவர் நினைத்து விட்டார் என்பது தான். ஆனால், உண்மை அதுவல்ல.

நபி மார்கள் விசயத்தில், தான் எவ்வளவு காலம் உயிர்வாழ வேண்டும் என்பதைத் தானே தீர்மாணித்துக் கொள்ளும் உரிமையை அல்லாஹ் நபிமார்களுக்கு வழங்கியிருக்கிறான்.

இந்த அடிப்படையில், மூஸா (அலை) அவர்களுக்கும் அந்த உரிமை இருந்தது. திடீரென்று மனித வடிவில் வந்த வானவர், தன்னை யாரென்று கூட அறிமுகப் படுத்திக் கொள்ளாமல், “உனது உயிரைப் பறிக்கப் போகிறேன்” என்று சொன்னவுடன், தனது உரிமையில் இன்னொரு மனிதன் அத்துமீறுவதாக நினைத்ததன் அடிப்படையிலேயே மூஸா (அலை) அவர்களுக்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது. “நான் எப்போது சாக வேண்டும் என்பதைத் தீர்மாணித்துக் கொள்ளும் உரிமையை அல்லாஹே எனக்கு வழங்கியிருக்கும் போது, நீ என்ன என் உயிரைப் பறிப்பது?” என்பது போல் வானவர் கன்னத்தில் அறைந்தார்.

மரணத்தை விரும்பாத மனிதராக மூஸா (அலை) இருந்திருந்தால், இரண்டாவது தடவை வானவர் வந்து, அவரது ஆயுளில் அல்லாஹ் வழங்கிய சலுகையை எத்தி வைத்த போது, அதை ஏற்றுக் கொண்டு, இன்னும் பல்லாயிரம் வருடங்கள் உயிர்வாழ்ந்திருப்பார். ஆனால், மூஸா (அலை) அவர்கள் அந்த சலுகையை ஏற்றுக் கொள்ளவில்லை; அந்த நிமிடமே தனது உயிரைக் கைப்பற்றிக் கொள்ளும் படி அல்லாஹ்விடம் வேண்டினார்.

 அடிப்படை:


ஒவ்வொரு நபிக்கும் என்று சில தனித்துவமான குணாதிசயங்கள் இருந்திருக்கின்றன. அவை அந்தந்த நபியுடைய தனிச்சிறப்பாக அல்லாஹ்வே ஏற்படுத்தியவை. இதே அடிப்படையில் மூஸா (அலை) அவர்களுக்கென்றும் சில தனித்துவமான குணாதிசயங்கள் இருக்கத் தான் செய்தன. அவை என்னவென்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

 மூஸா (அலை) அவர்களது தனித்துவமான குணாதிசயங்கள்:

முன்கோபம், பதற்றம், தைரியம், சில சமயங்களில் பிடிவாதம்.

 மூஸா (அலை) அவர்களது இந்தக் குணாதிசயங்களை குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் அவரது வரலாற்றைப் படிக்கும் போது அவதானிக்கலாம். ஒருசில உதாரணங்களைச் சுட்டிக் காட்டுகிறேன்:

1. ஒருமுறை பதற்றத்தில் ஒருவனை அடித்து விட்டார். அடித்த ஒரே அடியில், அவன் செத்தே போய் விட்டான்.

ஹிழ்ர் (அலை) அவர்கள் சகிதம் கடல் பிரயாணம் மேற்கொண்ட சம்பவத்தின் போது, அடிக்கடி பதற்றத்தில், ஹிழ்ர் (அலை) அவர்களோடு தான் ஆரம்பத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தையே மீறினார்.

அல்லாஹ்விடமிருந்து வேதக் கட்டளைகளைப் பெற்றுக் கொண்டு தனது சமுதாயத்தவரிடம் திரும்பி வந்த போது ஸாமிரி என்பவன் காளைக் கன்றின் மூலம் ஏற்படுத்தி வைத்திருந்த குழப்பத்தைக் கண்டவுடன் முன்கோபத்தில் தன்னையே மறந்து, அல்லாஹ் எழுதிக் கொடுத்த வேதப் பலகையையே தூக்கி வீசி விட்டு, ஹாரூன் (அலை) அவர்களது தாடியைப் பிடித்து உலுக்கினார்.

எல்லாவற்றுக்கும் மேல், பிடிவாதமாக அல்லாஹ்வை ஒரு தடவையாவது பார்த்தே தீர வேண்டுமென்று அல்லாஹ்விடமே அடம்பிடித்தார்.

இது தான் மூஸா (அலை) அவர்களது பாத்திரம். பதற்றம், அவசரம், முன்கோபம் ஆகியவை மூஸா (அலை) அவர்களின் பிறவிக் குணங்கள். இவை மனிதப் பலவீனங்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மூஸா (அலை) அவர்கள் விசயத்தில் மட்டும், அவரது இந்தப் பலவீனங்களை அல்லாஹ்வே பொருந்திக் கொண்டான். ஆகையால், இது பற்றி விமர்சிக்க யாருக்கும் அதிகாரமில்லை.

இது தான் இந்த ஹதீஸின் உண்மை நிலவரம். சுருக்கமாகக் கூறுவதென்றால், இந்த ஹதீஸ், நபி (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான செய்தி. இதில் எந்தக் குளறுபடியும் இல்லை; மார்க்கத்துக்கு முரணான எந்த அம்சமும் இல்லை. இவ்வளவு அழகான விளக்கம் இந்த ஹதிஸுக்கு இருக்கும் போது, அதையெல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு, மக்கள் மத்தியில் தமது ஹதீஸ் மறுப்பு வாதத்தை நியாயப் படுத்துவதற்காக இந்த ஹதீஸ் மீது அவதூறு கூறி, இவர்கள் அசிங்கப் படுத்த நினைக்கிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத்தை வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment