Friday, November 25, 2016

ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆனில் பால்குடி பற்றிய வசனம் எழுதப்படவில்லை என்று கூறினார்களா? நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின் குர்ஆனில் வசனம் நீக்கப்பட்டதா ??

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெரும் ஒரு ஹதீஸை பற்றிய விமர்சனமும் விளக்கமும்.

முதலில் இந்த ஹதீஸ் பற்றிய விமர்சன ஆய்விற்கு பின்னணி காரணம் என்ன?

தமிழ் நாட்டில் உள்ள ஒரு முன்னாள் நாத்திகர், அவரின் நாத்திக சிந்தனைக்கு ஒத்துவரவில்லை என்பதால் சூனியம் இல்லை என்றார். இதற்கு பதிலளித்த அறிஞர்கள் சூனியம் உண்டு என்றும் அல்லாஹ் நாடினால் தாக்கம் ஏற்படும்  என்றும்  ஸஹீஹான ஹதீஸிலும் குரானிலும் வந்துள்ளதே என்கிறார்கள். அவர் சூனியம் பற்றிய குரானின் ௨:௧௦௨ என்ற வசனத்தை முதலில் வளைத்தனர், ஒவ்வொரு பதிப்பிலும் ஒவ்வொரு திருத்தும் செய்தார் (அதை பற்றி ஒரு தனி விளக்கத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்). பிறகு குரானிற்கு முரண் படுகிறது என்று கூறி சூனியம் பற்றிய ஹதீஸை மறுத்தார். தனது கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்னும் பல ஹதீஸ்களை மறுத்தார். அவர் முறுத்த ஹதீஸ்கள் முதஷாபிஹ் என்னும் பல கருத்திற்கு இடம்பாடான ஹதீஸ்கள். அது போன்ற ஹதீஸ்களில் ஒன்று தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

முதலில் ஹதீஸை பார்ப்போம்.

عن عائشة  أنها قالت: كان فيما أنزل من القرآن (عشر رضعات معلومات يحرّمن ) ثم نسخن بـ(خمس معلومات) فتوفي رسول الله وهن فيما يقرأ من القرآن .

(صحيح مسلم 4/167 ، سنن الدرامي 2/157 ، سنن الترمذي 3/456 . السنن الكبرى للبيهقي 7/454 ، سنن ابن ماجة 1/635 ، سنن النسائي 6/100 ، الموطأ 2/117) .

2876. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
Book :17


மேல் உள்ள ஹதீஸின் அரபி பிரயோகத்தை பாருங்கள்.

குரானில் அருளப்பட்டு இருந்த (فيما أنزل) ஆயத்து  ஒன்று தான் "10 முறை தாய் பால் அருந்தினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்று"

பிறகு அது ஐந்து முறை என்று மாற்றப்பட்டது.

فتوفي رسول الله நபி (ஸல்) மவ்த்தாக்கப்பட்டார்கள்.

وهن فيما يقرأ من القرآن - அந்த ஆயத்து குரானில் ஓதப்பட்ட ஆயத்தாக இருந்த நிலையில்.

விமர்சனம் 1: இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் என்று இந்த ஹதீஸ் சொல்கிறது, அப்படி என்றால் குர்ஆனில் இப்போது இல்லையே? அந்த ஆயத்து எங்கே?

விளக்கம்:


இந்த ஹதீஸ் நபி (ஸல்) மரணத்திற்கு பிறகு ஒரு ஆயத்து தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம் தருகிறது என்ற விளக்கத்தை எங்கிருந்து முதலில் அறிந்தீர்கள். நாத்திகரிடம்(பிஜே) இருந்தா?

"மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்." என்றால் பலர் எப்படி ஓதினார்கள். பலர் ஓதவில்லை என்று தானே அர்த்தம்?

இங்கே ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்களில் மரணத்தை பற்றி குறிப்பிட காரணம் என்ன?

உங்கள் அறிஞர் பிஜே தொலைந்து விட்டது என்பது தான் அர்த்தம் என்று சொல்கிறார், மற்ற அறிஞர்கள் ஐந்து முறை பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு உருவாகும் என்பதற்கு இந்த ஹதீஸ் தான் ஆதாரம் என்கிறார்கள். அது எப்படி?

ஐந்து முறை பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு உருவாகும் என்ற ஆயத்து எங்கே என்ற கேழ்விக்கு, இந்த ஹதீஸ் தான் விளக்கம். அதுவும் குரானில் இருந்து மாற்றப்பட்டது விட்டது. மாற்றப்பட்டது பலருக்கு தெரியும், மக்களில் சிலர் அதை ஓதி வந்தார்கள்.

விமர்சனம் 2: ஐந்து முறை என்பது எப்போது மாற்றப்பட்டது?

விளக்கம்:


நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு சில நாட்கள் முன்னர் மாற்றப்பட்டுள்ளது. "மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்"

இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்க பின்னணி என்ன? எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில் சொல்வதாக தெரிகிறது. ஒரு வேலை அந்த ஆயத்து குரானில் இருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் ஆயிஷா (ரலி) எப்படி கூறி இருப்பார்கள்?.

எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில்,குர்ஆனில் உள்ள இந்த ஆயத்து என்று தானே கூறி இருப்பார்கள்.

அவ்வாறு கூறாமல் "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்" என்று கூறுவதிலிருந்து " குறிப்பிட்ட ஐந்து தடவைகள்" என்ற வசனம் நபி (ஸல்) அவர்களின் இறுதி காலத்தில் நீக்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது.

குறுக்கு கேள்வி: இந்த விளக்கத்தை சொல்லும் நீங்களும் பிற அறிஞர்களின் கருத்தை தானே தக்லீத் செய்கிறீர்கள்

விளக்கம்:


இது என்னுடய தனிப்பட்ட ஆய்வு மற்றும் விளக்கம். அது எப்படி பிறர் சொல்வதை கேட்டால் மட்டும் தக்லீத். பிஜே சொல்வதை சொன்னால் மட்டும் தக்கலீத் இல்லை??.

எனக்கு தெரிந்து என்னுடைய இந்த கேள்விகளை வேறு எந்த அறிஞரும் கேட்டதாக நான் அறிய வில்லை, அப்படி ஏதும் நீங்கள் அறிந்தால் அந்த வீடியோ தாருங்கள். மற்ற அறிஞர்களின் கருத்திற்கு ஒத்த கேள்வியை நான் கேட்டுள்ளேன் என்று அல்லாஹ்விற்கு நன்றி கூறுவேன்.

1. "மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்." என்றால் பலர் எப்படி ஓதினார்கள். பலர் ஓதவில்லை என்று தானே அர்த்தம்?

2. இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்க பின்னணி என்ன? எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில் சொல்வதாக தெரிகிறது. ஒரு வேலை அந்த ஆயத்து குரானில் இருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் ஆயிஷா (ரலி) எப்படி கூறி இருப்பார்கள்?. எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில் இந்த ஆயத்து என்று தானே கூறி இருப்பார்கள். அவ்வாறு கூறாமல் "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்" என்று கூறுவதிலிருந்து " குறிப்பிட்ட ஐந்து தடவைகள்" என்ற வசனம் நபி (ஸல்) அவர்களின் இறுதி காலத்தில் நீக்கப்பட்டுள்ளது.

இடைக் கேள்வி: இந்த ஹதீஸ், ஒரு ஆயத்து தொலைந்த விட்டது என்று நாங்கள் சொன்னால், ஏன் எங்களை பிஜே வை தக்லீத் செய்கிறோம் என்று கூறுகிறீர்கள்.

விளக்கம்:


அரபி வாசகத்தின் நேரடி பொருள் என்ன. பின்னணி காரணம் என்ன என்று மேலே பார்த்தோம். உங்களுக்கு சுயமாக அரபியை படித்து பொருள் புரிய தெரியுமென்றால் இதை நீங்களே எனக்கு முன்னாள் அறிந்த்திருப்பீர்கள். அவ்வாறு உங்களுக்கு அரபியை படித்து பொருள் புரிய முடியாதென்றால் என்ன செய்வீர்கள்? இந்த விளக்கத்தை எடுத்து கொண்டு போய் உங்கள் அறிஞர்களிடம் மட்டும் கேட்பீர்கள். இதை தான் நான் தக்லீத் என்றேன்.

எப்போது ஒருவர் ஸஹீஹான ஹதீஸிற்கு மாற்றமாக சொல்ல ஆரம்பித்தாரே அப்பவே நாம் பிற அறிஞர்களிடமும் கேட்டு அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இவர் இந்நாள் வரை நல்லது தானே சொன்னார், எவ்வளவு சோதனைகளை சந்தித்துள்ளார், இவர் சொல்கின்ற விளக்கம் தான் நமது சுய புத்திக்கு சரியாக தெரிகின்றது என்று எண்ணினால் நம்மை இது தக்லீதலும் ஒரு புதிய மதுஹபிலும் தான் கொண்டு சேர்க்கும்.


விமர்சனம் 3: குரானிலிருந்து பிறகு நீக்க பட்டாள்..? அந்த வசனத்தை ஜைத் பின் தாபித் அவர்கள் குரானை தொகுக்கும் பொழுது நீக்கினார்களா அல்லது உஸ்மான் (ரலி)) குரானை தொகுக்கும் பொழுது ஆயிஷா மீது உள்ள கோபத்தில் நீக்கிவிட்டார்களா .....? யாருடைய ஆட்சியில் அல்லது யார் குரானை தொகுக்கும் பொழுது நீக்கினார்கள்.
(உண்மையிலேயே இந்த கேள்வியை என்னிடம் ஒரு tntj சகோதரர் கேட்டார்).

விளக்கம்:


வசனத்தை நீக்கியது அல்லாஹ், அது பலருக்கு தெரியும் சிலருக்கு தெரியாது. எந்த எந்த பிரதியில் இருந்தது எந்த பிரதியில் இல்லை என்ற வரலாறு நம்மிடம் இல்லை. நீங்கள் அப்படி ஏதாவது ஒரு ஆயத்திற்காவது ஒரு வரலாறை கொண்டு வாருங்கள், பிறகு இந்த கேள்வியை கேளுங்கள்.

இடைக் கேள்வி: தக்லீத் விளக்கம் வேண்டும்?

தக்லீத் என்றால் இஸ்லாத்தின் மூலாதாரத்தை சுயமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர முடியாமல், ஒரு அறிஞர் சொல்வது சரியாக இருக்கும் என்ற நன்னம்பிக்கையில் அவர் சொல்வதை இஸ்லாம் என்று நம்பி பின்பற்றுவது.

விமர்சனம் 4: திருமணம் செய்த பிறகு விபச்சாரம் செய்தவன்) கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனமும் (தாய் மகன் என்ற உறவை ஏற்படுத்துவதற்கு) பருவ வயதை அடைந்தவருக்கு பத்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனமும் இறக்கப்பட்டது. எனது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு தாளில் அவை (எழுதப்பட்டு) இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவர்களுடைய விஷயத்தில் கவனம் செலுத்தினோம். எங்களுடைய வீட்டுப் பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அஹ்மத் (20112)

விளக்கம்:


எங்களுடைய வீட்டுப் பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத் (20112)

என்ற முஹம்மது பின் இஸ்ஹாக்கின் அறிவிப்பு பலமான இரண்டு அறிவிப்பாளர்கள் (யஹ்யா பின் சயீத் அன்சாரி மற்றும் மாலிக் இப்னு அனஸ்) அறிவிக்கும் முவத்தா, முஸ்லிமின் அறிவிப்பிற்கு முரண்படுகிறது. இது லயீப் என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் பிஜே பிறப்பதற்கு முன்னாலேயே சொல்லிவிட்டார்கள்.

அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் இந்த முஹம்மது பின் இஸ்ஹாக்கின் அறிவிப்பை சுன்னத்தான விஷத்தை நிறுவுவதற்கு ஆதாரமாக எடுக்கமாட்டார்கள்.

ஒரு வேலை நீங்கள் நினைப்பது போல் இந்த ஹதீஸை ஆதாரமானதாக எடுத்தாலும், இந்த ஹதீஸில் "பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது" என்று தான் உள்ளது. அது தின்றதால் அந்த ஆயத்தே குரானில் இல்லாமல் போனது என்று சொல்ல வில்லை. சொல்ல போனால் இந்த ஹதீஸை நீங்கள் நினைப்பது போல் ஆதாரமானதாக எடுத்தால் எந்த பிரதியில் இருந்தது என்ற உங்களுடைய கேள்விக்கு இது ஒரு பதில்.


விமர்சனம் 5: ஆயிஷா ரலி அறிவிப்பில் மூன்று ஐந்து ஏழு பத்து என்று நான்கு அறிவிப்பு வருகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்மும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (2869).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2869)

விளக்கம்:


ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று உள்ளது, அப்படி என்றால் எத்தனை முறை குடிப்பதால் மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவு ஏற்படும்? ஐந்து முறை தானே. இதெப்படி முரணாகும். முரண் ஹதீஸில் இல்லை அதை விளக்கியவர்களிடமும் அதை அப்படியே நம்பியவர்களிடமும் தான் உள்ளது. இதில் முரண்பாடு இல்லை


விமர்சனம் 6: ஏழு தடவைக்கு குறைவாக பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)

நூல் : முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் பாகம் : 7 பக்கம் : 466

தொளிவு படுத்துங்கள்

விளக்கம்:


நீங்கள் சொன்ன ஃபத்ஹுல் பாரீயில் அதே பக்கத்தில் முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் மாற்றாரு ஸஹீஹான அறிவிப்பில் இப்படி சொல்கிறது என்று சொல்கிறார்கள்

وعند عبد الرزاق بإسناد صحيح عنها قالت : لا يحرم دون خمس رضعات معلومات

ஐந்து முறை பால் குடித்தாலே தீவிர மஹ்ரம் உறவு ஏற்படாது

முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் மாற்றாரு அறிவிப்பில்

رقم الحديث: 13524
(حديث موقوف) عَنْ عَنْ مَعْمَرٍ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ ، قَالَ : أَتَيْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَسَأَلْتُهُ عَنْ صَبِيٍّ شَرِبَ قَلِيلا مِنْ لَبَنِ امْرَأَةٍ ؟ فَقَالَ لِي عُرْوَةُ : كَانَتْ عَائِشَةُ ، تَقُولُ : " لا يُحَرِّمُ دُونَ سَبْعِ رَضَعَاتٍ ، أَوْ خَمْسٍ " ، قَالَ : فَأَتَيْتُ ابْنَ الْمُسَيِّبِ ، فَسَأَلْتُهُ ، قَالَ : لا أَقُولُ قَوْلَ عَائِشَةَ ، وَلا أَقُولُ قَوْلَ ابْنِ عَبَّاسٍ وَلَكِنْ لَوْ دَخَلَتْ بَطْنَهُ قَطْرَةٌ بَعْدَ أَنْ يَعْلَمَ أَنَّهَا دَخَلَتْ بَطْنَهُ حَرُمَ .

"ஆயிஷா (ரலி) அவர்கள் ஐந்து முறை என்றோ ஏழு முறை என்றோ சொன்னார்கள்" என்று உள்ளது. அதாவது அறிவிப்பாளருக்கு சரியாக தெரியவில்லை. எனவே மற்ற பலமான அறிவிப்பின்படி, ஐந்து என்பது தான் சரியான எண்ணிக்கை.

விமர்சனம் 7: ஆயிஷா ரலி அறிவிப்பில் மூன்று ஐந்து ஏழு பத்து என்று நான்கு அறிவிப்பு வருகிறது.

மூன்று ஐந்து ஏழு பத்து, என்று எங்கே உள்ளது? இந்த கேள்வியே அடிப்படை நியாயமற்ற கேள்வி.

பத்து தடவை என்று முதலில் ஆயத் இறங்கியது, பிறகு ஐந்தாக மாற்றப்பட்டது. ஏழு என்பது அறிவிப்பாளரின் பலகீனமான அறிவிப்பு. மூன்று எங்கே இருந்து வந்தது? TNTJ அறிஞர்களின் பலகீனமான ஆய்வில் வந்தது என்று நான் நினைக்கிறன்.

விமர்சனம் 8:  இன்னும் இமாம் இப்னு ஹஜரின் கூற்று :

فتح الباري – ابن حجر ள جزء 9 – صفحة 147 ன

وأيضا فقول عائشة عشر رضعات معلومات ثم نسخن بخمس معلومات فمات النبي صلى الله عليه وسلم وهن مما يقرأ لا ينتهض للاحتجاج على الأصح من قولي الاصوليين لأن القرآن لا يثبت الا بالتواتر والراوي روى هذا على أنه قرآن لا خبر فلم يثبت كونه قرآنا ولا ذكر الراوي أنه خبر ليقبل قوله فيه والله أعلم

இப்னு ஹஜர் அவர்கள் எத்தனை முறை பால் புகட்ட வேண்டும் என்பது சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து பல முரண்பட்ட தகவல்கள் வருவதாகக் கூறிவிட்டு பின்வருமாறு கூறுகிறார். குறிப்பிட்ட பத்து தடவை பாலருந்தினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற சட்டம் குறிப்பிட்ட ஐந்து தடவையாக மாற்றப்பட்டது. இந்த வசனங்கள் குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அறிஞர்களின் சரியான கூற்றுப்படி ஆதாரத்திற்கு தகுதியாகாது.

ஏனென்றால் அதிகமானவர்களின் வழியாகத் தான் குர்ஆன் நிரூபணமாகும். இதை அறிவிப்பவர் இந்தக் கருத்தை ஹதீஸ் என்று சொல்லாமல் குர்ஆன் என்று சொல்கிறார். எனவே (அதிகமானோர் இவ்வாறு கூறாததால்) இது குர்ஆனாக ஆகாது. அறிவிப்பாளரின் கூற்று ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் அவர் இதை ஹதீஸ் என்றும் சொல்லவில்லை.

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 9 பக்கம் : 147

விளக்கம்:


இதற்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பை அரபி கற்ற ஆலிம்களிடம் கேட்டு பாருங்கள். எனக்கு தெரிந்த மொழிபெயர்ப்பு

மேலும், ஆயிஷா (ரலி) அறிவிப்பான் "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்." என்பதை கொண்டு (குர்ஆனில் ஒரு ஆயத்தை நாம் இணைக்க முடியாது) குரான் முத்தவாதிரான ஹதீஸை கொண்டு தான் நிறுவப்படும். இதை அறிவிப்பவர் இந்தக் கருத்தை ஹதீஸ் என்று சொல்லாமல் குர்ஆன் என்று சொல்கிறார். எனவே (அதிகமானோர் இவ்வாறு கூறாததால்) இது குர்ஆனாக ஆகாது.

எனவே யாரும் இந்த ஹதீஸை மறுக்கவில்லை. ஆக இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும் இதை ஹதீஸ் என்பதில் எந்த மறுப்பும் சொல்லவில்லை. குர்ஆனில் இருந்து மாற்றப்பட்டது என்பதையும் மறுக்கவில்லை.

Friday, November 18, 2016

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில்


முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இரண்டுவித பிரச்சினைகள்:

1) இஸ்லாத்திற்கு எதிரான  (குர்ஆன், நபிமொழிகள் இவற்றிற்கு எதிரான) குற்றச்சாட்டுகள்.
2) முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்.

மேற்கண்ட இரண்டையும் இணைத்து இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளாக திரிப்பது வாததிறமையை மட்டுமே ஆதாரமாக கொண்டவர்களின் வழக்கம். இஸ்லாம் என்பது குர்ஆன் என்னும் இறைவேதமும், நபிகளாரின் நபிமொழிகளே தவிர முஸ்லிம்கள் அல்ல.

ஆனால் ஒருவரின் கொள்கை ஏட்டின் வழியாக மற்றவர்களை கவர்ந்திடுமா? அல்லது மனிதர்கள் வாழ்ந்து காட்டிய வழியால் கவர்ந்திடுமா? என்றால், வாழ்ந்து காட்டுவதால்தான் மற்றவர்களை கவர்ந்திடும்.

எனவே முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் நாடுகளிலும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளும் இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளாக விமர்ச்சிக்கப்படுகிறது. இது உண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாகும். எனவே முஸ்லிம்கள் தங்களின் வாழ்க்கையில் நடக்கும் தவறுகளை திருத்திக்கொண்டு ஒழுக்க சீலர்களாக, நியாயவாதிகளாக, நடுநிலைவாதிகளாக இஸ்லாம் சொல்லும் முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மதத்தைப் பற்றி விமர்சனம் செய்ய அம்மதத்திற்கு எதிரானோர் எழுதிய புத்தகங்களையோ, இணையதளங்களையோ வாசித்துவிட்டு வெளிப்படுத்துவது ஆரோக்கியமான விமர்சனமாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. தி.க.இயக்கத்தினர்கள் எழுதிய புத்தகங்களை இந்து மதத்தைப் பற்றிய நடுநிலை விமர்சனமாக பார்க்க முடியாது.

இன்று “இஸ்லாம் – முஸ்லிமல்லாதவர்களின் பார்வையில்” என்று விமர்ச்சிக்கப்படுவதும் இஸ்லாத்தை பிடிக்காத முஸ்லிம்களோ, பிறமதத்தினர்களோ எழுதிய புத்தகங்களின் மறுபதிப்பே தவிர நடுநிலையான விமர்சனம் அல்ல.

காய்தல் உவத்தல் ஒருவரின் விமர்சனத்தில் இருக்கிறதா இல்லையா என்பதை எழுதியவரரோ அல்லது பிறரோ சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எழுதியவரின் எழுத்துக்களே சாட்சி. அவரின் “இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்” என்ற பழைய தலைப்பே அதற்கு சாட்சியாக நிற்கிறது. எப்படி இருந்தாலும் விமர்சனங்களுக்கு கண்ணியமான முறையில் பதில் கொடுக்க முஸ்லிம்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

காய்தல் என்பது வெறுப்பு, பொறாமை, கோபம் என்ற குணங்களைக் குறிக்கும். "காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே"--அறநெறிச்சாரம்

இந்தச் சூழ்நிலையில் தமிழ்மணம் வாசகர்களுக்கு முஹம்மது நபியைப்பற்றிய நடுநிலையான விமர்சனம் ஒன்றை தருவது நன்மை பயக்கும் என நினைக்கிறேன்.

இப் பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்க்கு மிகப்பெரும் செல்வாக்கும் வல்லமையும் பெற்றிருந்தவர்கள் (நல்லவர்கள், தீயவர்கள் மற்றும் புகழ்பெற்றவர்களில்) யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் The 100 என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதில் முஹம்மது நபிக்கு முதலாம் இடத்தையும், உமர்(ரலி) அவர்களுக்கு 52-வது இடத்தையும் கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். இனி அவரது வரிகளை படிப்போம்.

முஹம்மது நபி (கி.பி. 570 to 632) 

இந்த உலகத்தில் மிகப்பெரிய செல்வாக்கும் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதன்மையானவராக தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி?” என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒருசேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அவருடைய வழக்கை அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் மற்றும் சமயத் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதி்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக விளங்குகிறது.

இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மை யானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் தலைநகராக விளங்கிய நாகரிகத்தின் தலைநகரில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள்.

ஆனால், முஹம்மதோ வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள்.

ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள், எளிய சூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள். அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள்.

அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. அவர்கள் தம் நாற்பதாம் வயதை அடையும் வரை, குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் அவர்களிடம் மிகக் குறைவாகவே இருந்தன.

அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை.

அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.

இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.

பிறகு சிறுகசிறுக, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் என்னினார்கள். கி.பி. 622ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிடைத்தது.

இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்கள் கிடைத்தனர்.

இதனால் அவர்களுக்கு கிடைத்த செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக ஆக்கியது. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மதைப் பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன.

இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது, மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக் கோத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் இறுதி இரண்டரை ஆண்டுகளும் கண்டார்கள். அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.

அரபு நாட்டின் (Bedouin என்னும்)  நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி அவர்களுக்குள் ஒருவரையொருவர் அழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே காலத்தில் நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படைகள் இருக்கவில்லை.

ஆனால் வரலாற்றில் முதன்முறையாக முஹம்மது அவர்களால் ஒன்று சேர்க்கப்பட்டு உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின.

அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கலின் புதிய பாரசீக பேரரசு பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை(Constantinople) மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையை பார்த்தால், இந்த எதிரிகளுடன் அரபு நாடோடிக் கோத்திரத்தார் ஈடுகொடுக்க முடியாதோர்தாம்.

எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பைஸாந்தியப் பேரரசிடமிருந்து எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.

முஹம்மது அவர்களின் நெருங்கிய தோழர்களில், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்ர், உமர் இப்னு அல்-கத்தாப் ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை.

கி.பி. 711க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடதிசை நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் (strait) கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன.

கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றியது.  ஆனால், 732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம் படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த நாடோடிக் கோத்திரத்தார் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத - இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.

ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலை பெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசமாக இருந்து வந்தாலும், அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் நடந்த போருக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர்.

ஆனாலும் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது.

இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும்,வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை எப்படிக் கணக்கிடுவது?

ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர்.

உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.


ஒன்று இஸ்லாத்தின் இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி,  ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான் 

கிறிஸ்துவ வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு ( அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை (THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான் காரணமாக இருந்தார்.(St. PAUL)

இஸ்லாத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய மரபுகளை வகுப்பதிலும் முஹம்மது நபி அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இறை வெளிப்பாடுகள் உறுதியான நம்பிக்கையுடனும், கடமையுணர்வுடனும், பதிவு செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும் (மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை.

கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது: ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். 

உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார், இனிவரும் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.

வரலாற்று நிகழ்வுகளில் முக்கியம் வாய்ந்த பல நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லலாம். உதாரணமாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்கா விட்டாலும், ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றிருப்பார்கள்.

அனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபியவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை. எனவே அன்னார் இல்லாமலேயே இது போன்ற வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை.

மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான்.

ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன.

குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருக்கும் காரணத்தால் பதின்மூன்று நூற்றாண்டுகளுக் கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்கா மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம்.

இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே நம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. உதாரணமாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.
ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன்.
நன்றி : The 100
ஆசிரியர்: மைக்கேல் ஹெச். ஹார்ட்
தமிழில்:
இரா. நடராசன்
மோ. வள்ளுவன் கிளாரன்ஸ் மோத்தா
மவ்லவி எம். அப்துல் வஹ்ஹாப்
பதிப்பாசிரியர் : மணவை முஸ்தபா
Published by:
Meera Publication
AE 103, Anna Nagar
Chennai – 600 040, India
தமிழ் வார்த்தைகளில் சுறு திருத்தங்களுடன் மறு பதிவீடு  செய்வது, முஹம்மது அப்துல் காதிர், சித்தையன் கோட்டை.